அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ1 கோடி இழப்பீடாக வழங்கப்படும் என டாடா குழுமம் அறிவித்துள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 242 பேரை சுமந்துக் கொண்டு லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 ரக விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே குடியிருப்பு பகுதியில் விழுந்து வெடித்து சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்தவர்கள் மட்டுமல்லாது, விமானம் மோதிய மருத்துவ விடுதி மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த பலரும் பலியாகியுள்ளனர். இதுவரை 170 உயிரிழப்புகள் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் விமான விபத்தில் உயிரிழந்த பயணிகள் மற்றும் பொதுமக்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடாக வழங்கப்படும் என டாடா குழுமம் அறிவித்துள்ளது. மேலும் காயம் அடைந்தவர்களின் அனைத்து மருத்துவ செலவுகளையும் ஏற்பதாகவும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் மோதி சேதமடைந்த பி.ஜே.மருத்துவ விடுதியை சரிசெய்ய அனைத்து உதவிகளும் செய்யப்படும் என டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை டாடா குழுமம் ஏலத்தில் வாங்கி நிர்வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
Edit by Prasanth.K