அதானி, அம்பானியிடம் எவ்வளவு நிதி வாங்கினீர்கள்.? ராகுல் காந்திக்கு பிரதமர் கேள்வி..!!

Senthil Velan

புதன், 8 மே 2024 (13:18 IST)
தேர்தல் தேதி அறிவித்த உடன் அம்பானி, அதானியை விமர்சிப்பதை ராகுல் காந்தி நிறுத்திவிட்டதாகவும், அவர்களிடம் எவ்வளவு நிதி பெற்றீர்கள் எனவும் பிரதமர் மோடி கேள்வி எழுப்பி உள்ளார்.
 
தெலுங்கானாவின் கரீம் நகரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாடே முதன்மை என்ற நோக்கத்தில் பாஜக பணியாற்றி வருகிறது என்றார்.  ஆனால், காங்கிரசும், பிஆர்எஸ் கட்சியும் குடும்பமே முக்கியம் என்ற கொள்கை அடிப்படையில் பணியாற்றுகின்றன என்றும் அக்கட்சிகளானது, குடும்பத்தினால், குடும்பத்தினருக்காக, குடும்பத்தினரே இயக்கும் கட்சியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்த இரு கட்சிகளுக்கும் வித்தியாசம் இல்லை என  குறிப்பிட்ட பிரதமர், அக்கட்சிகளை ஊழல், சமரச அரசியல் மற்றும் மோசமான நிர்வாகம் ஆகியன ஒன்று சேர்க்கிறது என்று விமர்சித்துள்ளார். குடும்பமே முக்கியம் என்ற கொள்கையால், முன்னாள் பிரதமர் நரசிம்மராவை காங்கிரஸ் அவமதித்தது என்றும் அவர் இறந்த பிறகும், அவரது உடலை காங்கிரஸ் அலுவலகத்திற்குள் கொண்டு வர அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். ஆனால், அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கவுரவப்படுத்தியது என்று பிரதமர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ALSO READ: மத கலவரத்தை தூண்டுகிறார் பிரதமர் மோடி..! சென்னை உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு..!
 
ரபேல் விமானம் இந்தியாவிற்கு வந்தது முதல் ராகுல் காந்தி, கடந்த 5 ஆண்டுகளாக அம்பானி, அதானி உள்ளிட்ட 5 தொழிலதிபர் பற்றி பேசி வருகிறார்  என்றும் ஆனால், தேர்தல் தேதி அறிவித்த உடன், அம்பானி அதானியை விமர்சிப்பதை ராகுல் நிறுத்திவிட்டதாகவும் பிரதமர் விமர்சித்துள்ளார்.  அவர்களிடம் எவ்வளவு நிதி வாங்கினீர்கள்? இருவரையும் விமர்சிப்பதை நிறுத்தியதற்கு என்ன ஒப்பந்தம் போட்டுள்ளீர்கள் என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்