இணையத்தில் வெளியாகிய நிர்பயா குறித்த ஆவணப் படத்தை நீக்க உத்தரவு

வியாழன், 5 மார்ச் 2015 (18:56 IST)
டெல்லியில் ஓடும் பேருந்தில் கற்பழிக்கப்பட்ட நிர்பயா என்ற இளம்பெண் குறித்த 'இந்தியாவின் மகள்' ஆவணப்படத்தை யூ டியூப் மற்றும் வலைதளத்தில் இருந்து நீக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
 
நிர்பயா என்ற புனைபெயரில் அழைக்கப்பட்ட, மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி இரவு தனது நண்பருடன் திரைப்படம் பார்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த டெல்லியில் ஓடும் பேருந்தில் கொடூரமாக கற்பழிக்கப்பட்டார்.
 

 
மேலும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதுடன், கொடூரமாகத் தாக்கப்பட்டு சாலையோரம் வீசப்பட்டார். அவருடன் சென்ற நண்பரும் கடும் தாக்குதலுக்கு உள்ளானார். பின்னர் அவர் பரிதாபமான நிலையில் உயிரிழந்தார்.
 
இந்த கற்பழிப்பு வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுள் ஒருவரான முகேஷ் சிங் என்பவனிடம் லெஸ்லி உட்வின் என்ற திரைப்பட தயாரிப்பாளர் இந்தியாவின் மகள் என்ற ஆவணப்படத்திற்காக பேட்டி கண்டார்.
 
உலக பெண்கள் தினமான மார்ச் 8 ஆம் தேதியன்று இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்ப பி.பி.சி. தொலைக்காட்சி திட்டமிட்டிருந்தது. ஆனால், பி.பி.சி. முன்கூட்டியே ஒளிபரப்பியுள்ளது. இந்த வீடியோ யூ டியூப் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
 
இது தொடர்பாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்துக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. மேலும் தடையை மீறி ஆவணப்படத்தை ஒளிபரப்பிய பி.பி.சி. தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்