குடிபோதையில் இருந்த மணமகன், மணமகளுக்கு மாலை அணிவிப்பதற்கு பதிலாக, பக்கத்தில் இருந்த ஒரு நண்பருக்கு மாலை அணிவித்ததை அடுத்து, மணமகள் ஆத்திரம் அடைந்து திருமணத்தை நிறுத்திய சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில், பெற்றோர்கள் ஏற்பாடு செய்த திருமணத்திற்கு சம்மதித்த இளம் பெண் ஒருவர் மணமேடையில் கனவுகளுடன் காத்திருந்தார். அப்போது மணமகன், குடிபோதையில் தள்ளாடியபடியே மணமேடைக்கு வந்தார். அப்போதே மணமகளுக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது.
இதனை அடுத்து, குடிபோதையில் இருந்த அந்த மணமகன், மணப்பெண்ணுக்கு மாலை அணிவிப்பதற்கு பதிலாக, பக்கத்தில் இருந்த அவரது நண்பருக்கு மாலை அணிவித்தார். இதனால் மணப்பெண் அதிர்ச்சி அடைந்தார்.
இதனை அடுத்து, மணமகள் "இந்த இளைஞரை நான் திருமணம் செய்ய மாட்டேன்" என்று உறுதியோடு தெரிவித்ததால், மணமேடையில் பரபரப்பு ஏற்பட்டது. மணமகளின் குடும்பத்தினர், மணமகளை சமாதானப்படுத்த முயன்ற போதிலும், " திருமண நாளிலேயே போதையில் இருந்தால், அவர் எப்படி என்னை காப்பாற்றுவார்?" என்று மணப்பெண் கேட்டுக்கொண்டார்.
அதுமட்டுமன்றி, மணப்பெண் நேரடியாக காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். மணப்பெண்ணின் புகாரின் பேரில், மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.