பிளாஸ்டிக் 10 ரூபாய் நோட்டு. ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அனுமதி

சனி, 18 மார்ச் 2017 (05:10 IST)
காகிதங்களால் அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுக்கள் ஒருசில வருடங்களில் பாதிப்பு அடைந்து உபயோகிக்க முடியாத நிலை ஏற்படும் நிலையில் ரூபாய் நோட்டுக்களை வெளிநாடுகளை போல பிளாஸ்டிக்கினால் அச்சடிக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில வருடங்களாக எழுந்து வருகின்றது.


 


அந்த வகையில் கடந்த 2014ஆம் ஆண்டே இதற்கான திட்டத்தை ஒருசில நகரங்களில் மத்திய அரசு சோதனை மேற்கொள்ள இருந்தது. ஆனால் எதிர்பாராத காரணத்தால் அப்போது அது நடைபெறவில்லை

இந்நிலையில் தற்போது இதற்கான ஆயத்தபணிகள் ஆரம்பமாகிவிட்டது. முதல்கட்டமாக பிளாஸ்டிக் 10 ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க மத்திய அரசு, ரிசர்வ் வங்கிக்கு அனுமதி வழங்கிவிட்டது.

இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது, “நாட்டின் 5 பகுதிகளில் பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சடித்து சோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சடிக்கத் தேவையான மூலப்பொருள்களை கொள்முதல் செய்யவும், பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சடிக்கவும் ரிசர்வ் வங்கிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்