நான் மோசடி செய்துட்டு ஓடினேனா? என்ன நடந்தது தெரியுமா? - முதல்முறையாக மனம் திறந்த மல்லைய்யா!

Prasanth K

செவ்வாய், 10 ஜூன் 2025 (11:40 IST)

பிரபல இந்திய தொழிலதிபரான விஜய் மல்லைய்யா, ஏராளமாக வங்கியில் கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பியோடிய நிலையில் நீண்ட காலம் கழித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டி வேகமாக வைரலாகி வருகிறது.

 

இந்தியாவில் கிங் ஃபிஸ்ஸர் ஏர்லைன்ஸ், மதுபான தயாரிப்பு நிறுவனம், ஐபிஎல்லில் ஆர்சிபி அணியின் உரிமையாளர் என வெகு பிரபலமாக இருந்தவர் விஜய் மல்லையா. வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி வரை கடன் பெற்றிருந்த மல்லையா அதை திரும்ப செலுத்த முடியாத நிலையில் நாட்டை விட்டு தப்பி இங்கிலாந்து சென்றார். அவர் மீதான வழக்குகள் இன்னமும் நடந்து வரும் நிலையில் அவரை கைது செய்து இந்தியா அழைத்து வர வேண்டும் என்ற முயற்சிகளும் நடந்து வருகின்றன.

 

இந்நிலையில் விஜய் மல்லையா நீண்ட ஆண்டுகள் கழித்து ராஜ் ஷமானி என்ற யூட்யூபரின் சேனலில் 4 மணி நேர போட்கேஸ்ட் ஒன்றில் பேசியிருந்தார். கடந்த 4 நாட்களில் இந்த வீடியோ 2 கோடி பார்வைகளை கடந்து ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

 

அதில் பேசிய அவர் “கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் ஊழியர்களின் சம்பளத்தை வழங்க நான் குறிப்பாக நீதிமன்றத்தில் விண்ணப்பித்தேன். ஆனால் வங்கிகள் அதை நிராகரித்தன, நீதிமன்றங்களும் அனுமதியை நிராகரித்தன. அதற்கு மேல் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அவர்களுக்கு நடந்ததற்கு நான் மிகவும் வருந்துகிறேன். அவர்களில் சிலருக்கு சம்பளம் கிடைக்காததற்கு நான் மிகவும் வருந்துகிறேன். எனக்கு எந்த சாக்குப்போக்கும் சொல்லத் தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.

 

மேலும் “நான் 2016 மார்ச்க்கு பிறகு இந்தியாவிற்கு செல்லாததற்காக நீங்கள் என்னை தப்பி ஓடியவன், திருடன் என்று அழைக்க விரும்பினால் அழைத்துக் கொள்ளுங்கள். ஆனால் நான் ஓடிப்போகவில்லை. திட்டமிட்ட பயணமாகதான் சென்றேன். நியாயமான சில காரணங்களுக்காக நான் இந்தியா திரும்பவில்லை. ஆனால் இதில் திருட்டு பட்டம் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை” என பேசியுள்ளார்.

 

இந்த வீடியோ 2 கோடி பார்வைகளை கடந்து வைரலானதை தொடர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மல்லையா “என் உண்மையான கதையை இவ்வளவு பேர் ஆர்வமாக கேட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்