டெல்லி தேர்தல் முடிவுகள் பீகாரிலும் எதிரொலிக்குமா? தேஜஸ்வி யாதவ் கருத்து..!

Siva

திங்கள், 10 பிப்ரவரி 2025 (09:29 IST)
டெல்லி தேர்தல் முடிவுகள் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் வேறு சில மாநிலங்களிலும் எதிரொளிக்கும் என்று பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். இதற்கு பதிலளித்துள்ள பீகார் மாநிலத்தின் ராஷ்டிரிய ஜனதா தலைவர் தேஜாஸ்வி யாதவ், இதை மறுத்துள்ளார்.

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில், இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், டெல்லியில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி, பீகாரில்  எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

"ஜனநாயகத்தில் மக்கள் தான் உண்மையான மன்னர்கள். ஜனநாயகத்தின் அழகு என்னவென்றால், யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்கிறார்கள் என்பதுதான். மக்களின் தீர்ப்பு எப்போதும் சரியானதாக இருக்கும்," என்று அவர் தெரிவித்தார்.

டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சியைப் பிடித்திருந்தாலும், தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றுவார்களா, அல்லது வெறும் வார்த்தைகளாக இருந்து விடப்போகிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

டெல்லி தேர்தல் எந்த விதத்திலும் பீகார் சட்டப்பேரவை தேர்தலில் எதிரொலிக்காது என்றும், "பீகார் எப்போதும் பீகாராகவே இருக்கும். இங்கு உள்ள மக்கள் மிகவும் தெளிவாக யோசித்து வாக்களிப்பார்கள்," என்றும் அவர் தெரிவித்தார்.

பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், "டெல்லியைப் போலவே பீகாரிலும் வெற்றி பெறுவோம்" என பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர்.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்