தனித்துவிடப்படும் தேசிய கட்சிகள்; ஆந்திராவிலும் அதே நிலை

வெள்ளி, 25 ஜனவரி 2019 (07:56 IST)
தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி வைக்க மாநில கட்சிகள் தயங்கி வருகின்றன. உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ், பாஜக அல்லாத வலிமையான கூட்டணியாக அகிலேஷ்-மாயாவதி கூட்டணி இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனாவும், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியும்  காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்டன

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இணையும் என்று கூறப்பட்டாலும் இந்த கூட்டணி தேர்தலுக்கு முன்னரோ அல்லது தேர்தலுக்கு பின்னரோ உடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவை கூட்டணியில் சேர்த்து கொள்ள தமிழகத்தின் எந்த கட்சியும் தயாராக இல்லை.

இந்த நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும்  காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் தனித்து போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. சமீபத்தில் நடைபெற்ற தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தும் தோல்வியை சந்தித்த சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி வரும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக அறிவித்துள்ளது.

அதேபோல் தெலுங்கானாவில் சந்திரசேகரராவ் கட்சியும் தனித்து போட்டியிடவுள்ளது. எனவே  காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் பெரும்பாலான மாநிலங்களில் தனித்து போட்டியிடுவதால் மாநில கட்சிகளின் கையே ஓங்கியுள்ளது. இதனால் தொங்கு பாராளுமன்றம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்