வங்கியில் பொதுமக்கள் டெபாசிட் செய்த FD பணத்தை அவர்களுக்கே தெரியாமல் எடுத்து, அந்த பணத்தை பங்குசந்தையில் முதலீடு செய்த பெண் வங்கி ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா என்ற நகரத்தில், தனியார் வங்கியில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் சாக்ஷி குப்தா. இவர், வாடிக்கையாளர்களின் FD கணக்கின் யூசர் ஐடி மற்றும் சில விவரங்களை தவறாக பயன்படுத்தி, மூன்று ஆண்டுகளில் 41 வாடிக்கையாளர்களின் 110 கணக்குகளில் இருந்து சுமார் 4 கோடிக்கு அதிகமான பணத்தை, அவர்களது அனுமதி இன்றி எடுத்துள்ளார். மேலும், அந்த பணத்தை அவர் பங்குசந்தைகளில் முதலீடு செய்து உள்ளார்.
ஆனால், பங்குசந்தையில் அவர் முதலீடு செய்த நிறுவனங்கள் சரிவை சந்தித்ததால், அந்த பணத்தை மீண்டும் வாடிக்கையாளர்களின் கணக்கில் திருப்பி செலுத்த முடியவில்லை.
இந்த நிலையில், தற்செயலாக ஒரு வாடிக்கையாளர், தான் டெபாசிட் செய்த FD பணத்தை திருப்பி கேட்கும் போது, அவரது கணக்கில் ஜீரோ இருப்பதை பார்த்த வங்கி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதன் பின்னர் நடந்த விசாரணையில், சாக்ஷி குப்தா மொத்தம் 41 வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து 4.5 கோடி ரூபாய்க்கு அதிகமாக பணத்தை, அனுமதி இன்றி எடுத்தது தெரியவந்தது.
இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்த மொபைல் எண்களை, சாக்ஷி குப்தா தன்னுடைய உறவினர்களின் எண்களாக மாற்றியுள்ளதாகவும், அதனால் தான் பணம் எடுக்கும்போது OTP கூட வாடிக்கையாளர்களுக்கு வராமல் இருந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இனி வங்கிகளில் FD கூட பாதுகாப்பாக இல்லை என்ற நிலை, இதுபோன்ற நபர்களால் உருவாகியுள்ளது.