அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவல் நீட்டிப்பு..! கவிதாவின் காவலும் நீட்டித்து உத்தரவு..!!

Senthil Velan

செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (15:07 IST)
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. 
 
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை கைது மற்றும் அமலாக்கத்துறை காவலுக்கு அனுப்பியதற்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், அரவிந்த் கெஜ்ரிவால் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
 
டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கெஜ்ரிவாலுக்கு இடைக்கால நிவாரணம் அளிக்க மறுப்பு தெரிவித்து விட்டது. வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை ஏப்ரல் 24ஆம் தேதிக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 29ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.
 
இந்நிலையில்  அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடைவடைந்ததையடுத்து, காணொலி காட்சி மூலம் விசாரணை நீதிமன்றமான ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ALSO READ: வெப்பத்தணிப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்..! முதல்வருக்கு அன்புமணி கடிதம்..!!

வழக்கை விசாரித்த நீதிபதி, டெல்லி முதல்வர் அரவிந்த்  கெஜ்ரிவாலின் காவலை மே 7 வரை நீட்டித்து உத்தரவிட்டார். முன்னாள் முதல்வர் கே.சி.ஆரின் மகள் கவிதாவின் நீதிமன்ற காவலையும் மே 7 வரை டெல்லி நீதிமன்றம் நீட்டித்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்