மின்சார கம்பத்தை பிடித்ததால் ஷாக் அடித்து பெண் பலி: வைரலாக பரவும் பதற்றமான வீடியோ

சனி, 29 ஜூன் 2019 (19:24 IST)
சூரத்தில் மழை பெய்துகொண்டிருந்தபோது, ஒரு பெண் மின்சார கம்பத்தை பிடித்ததால், ஷாக் அடித்து பலியான வீடியோ பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத் நகரில், பிரபு தர்ஷன் சொசைட்டி என்ற பகுதியை சேர்ந்த பெண் காஜல். இவருக்கு வயது 20. இவர் கார்கில் சௌக் என்ற பகுதியை கடந்து வீட்டிற்கு செல்லும் போது, மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது நனைந்து போன மின்கம்பத்தை தற்செயலாக பிடித்ததில் உடம்பில் மின்சாரம் பாய்ந்தது.

மின்சாரம் பாய்ந்தவுடன், மின் கம்பத்தை பிடித்தபடியே கீழே சாய்ந்தார். சாலையில் சென்றவர்கள், தங்களுக்கும் மின்சாரம் பாய்ந்துவிடும் என்ற பயத்தில் யாரும் உதவிக்கு வரவில்லை.

பின்பு அவரின் வீட்டிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே காஜலின் தந்தை மற்றும் சிலர் அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள், காஜல் மின்சாரம் பாய்ந்தவுடனே இறந்துவிட்டார் என்று கூறியுள்ளனர்.

இச்சம்பவம் அந்த பகுதியிலுள்ள சிசிடிவி கேமரவில் பதிவாகி இருந்தது. தற்போது அந்த சிசிடிவி காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் மழை நேரத்தில் சாலையில் செல்லும்போது மிகவும் கவனமாக செல்லவேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்