1.5 லட்சம் அஞ்சல் நிலையங்கள் வங்கிகளாக மாற்றப்படும்: கபில் சிபல்

திங்கள், 1 ஆகஸ்ட் 2011 (13:37 IST)
நாடு முழுவதுமுள்ள சுமார் 1.5 லட்சம் அஞ்சல் நிலையங்கள் வங்கிகளாக மாற்றப்படும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனைக் கூறிய அவர், மேலும் தெரிவித்ததாவது:

நாட்டில் உள்ள எல்லா கிராமங்களிலும் வங்கிக் கிளையை துவக்க பாரத ஸ்டேட் வங்கியால் முடியவில்லை. இதைக் கருத்தில் கொண்டு அஞ்சல் நிலையங்களை வங்கிகளாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கு ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் தேவை.அது கிடைத்ததும் நாட்டிலுள்ள 1.5 லட்சம் அஞ்சல் நிலையங்கள் "போஸ்டல் பேங்க்'குகளாக மாற்றப்படும். அஞ்சல் நிலையங்கள் ஏற்கனவே நாட்டின் பல்வேறு கிராமங்களில் செயல்பட்டுவருகின்றன.

கட்டடங்கள், அடிப்படை வசதிகள் உள்பட அனைத்து வசதிகளும் தற்போது உள்ளன. இதனால் அடிப்படை கட்டமைப்பு செலவு இல்லை.எனவே கிராமப்புறங்களில் குறைந்த செலவில் வங்கிச் சேவையைதுவக்க முடியும்.

இது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.நவீன தொழில்நுட்ப வசதியை கிராம மக்கள் பெறுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்