பிரதமர் அலுவலகம் அருகே இளைஞர் தீக்குளிப்பு

ஞாயிறு, 15 பிப்ரவரி 2009 (12:55 IST)
டெல்லியில் பிரதமர் அலுவலகம் அருகே இளைஞர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். தற்போது அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி விஜய் சவுக் பகுதியில் பிரதமர் மன்மோகன் சிங்கின் அலுவலகம் அமைந்துள்ளது. இப்பகுதியில், நேற்று பிற்பகல் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் உடலில் மண்ணெண்ணெ‌ய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை உடனடியாக மீட்டு தீயை அணைத்தனர். எனினும் அவரது உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அந்த இளைஞர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தீக்குளித்த இளைஞர் பெயர் அபிஷேக் குமார் (32) என்றும், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனினும் எதற்காக அவர் தீக்குளித்தார் என்பது தெரியவில்லை.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பிரதமர் அலுவலகம் அருகே இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்