பாலியல் குற்றங்கள் குறையுமானால் ஆயிரம் முறை ராஜினாமா செய்ய தயார் - டெல்லி கமிஷ்னர்

திங்கள், 22 ஏப்ரல் 2013 (17:25 IST)
டெல்லியில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், "நான் ராஜினாமா செய்தால் குற்றங்கள் குறையுமா" என்று டெல்லி காவல்துறை ஆணையர் கேள்வியெழுப்பியுள்ளார்.

தலைநகர் டெல்லியில் 5 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று டெல்லி காவல்துறை ஆணையர் பதவி விலக வேண்டும் என்று சமூக அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், சிறுமி பலாத்காரம் தொடர்பாக காவல்துறை ஆணையர் நீரஜ் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 5 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 2ஆவது நபர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். புகாரை மறைப்பதற்கு பணம் தர முன்வந்தது தொடர்பாக, 72 மணி நேரத்தில் விசாரணை நடத்தி தவறு செய்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்.

அவர்கள் தவறு செய்ததற்காக நான் ஏன் பதவி விலக வேண்டும்? நான் பதவியை ராஜினாமா செய்தால் மட்டும் பாலியல் குற்றங்கள் குறைந்துவிடுமா? குற்றங்கள் குறையுமானால் நான் ஆயிரம் முறை ராஜினாமா செய்ய தயார் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்