எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழைந்த சிறுமி...

செவ்வாய், 2 ஏப்ரல் 2013 (13:28 IST)
இந்திய எல்லையை தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழைந்த 7 வயது சிறுமியை பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் மீட்டு பத்திரமாக இந்தியாவிற்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் பிக்கானர் மாவட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் எல்லைப் பகுதி உள்ளது. அங்கு இந்திய எல்லையோரமாக விவசாயி ஒருவருக்கு சொந்தமான வயல் உள்ளது. கடந்த 29 ஆம் தேதி அந்த வயலுக்கு தனது 7 வயது மகளுடன் சென்ற விவசாயி, தனது மகள் விளையாட்டாக வேலியை தாண்டி பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்ததை கவனிக்கவில்லை.

வேலை முடிந்ததும் மகளை தேடிய விவசாயி, அவரின் 7 வயது மகள் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்ததை உறுதி செய்து கொண்டு இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினரிடம் முறையிட்டு, தனது மகளை மீட்டுத் தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து, இந்திய எல்லைப்படை வீரர்கள், பாகிஸ்தான் எல்லைப்படை வீரர்களுக்கு இத்தகவலை தெரிவித்து கொடி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்கள். நேற்று நடைபெற்ற கொடி கூட்டத்தில், இந்திய எல்லைப்படையினரிடம் அந்த 7 வயது சிறுமி ஒப்படைக்கப்பட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்