தேசிய பங்குச் சந்தை நிஃப்டி உயர்வு!

திங்கள், 14 ஜனவரி 2008 (19:44 IST)
மும்பை பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கியவுடன் சென்செக்ஸ் உயர்ந்து காணப்பட்டது. இதே போல் தேசிய பங்குச் சந்தையிலும் நிஃப்டி அதிகரித்தது. ஆனால் இரண்டு பங்குச் சந்தைகளிலும் ஒரே நிலையாக இல்லாமல், பங்குகளின் விலை அதிகரிப்பது, குறைவது என்ற போக்கிலேயே இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் ஒரு நிலையில் 20,985.62 புள்ளிகளாக உயர்ந்தது. இதற்கு எதிராக 20,661.90 புள்ளிவரை குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி காலையில் வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தைவிட 20 புள்ளிகள் குறைந்து 6,179.15 ஆக இறங்கியது. இறுதியில் 6.70 புள்ளிகள் அதிகரித்து 6206.80 புள்ளிகளாக உயர்ந்தது.

சென்செக்ஸ் குறைந்ததற்கு காரணம்,இன்றைய வர்த்தகத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, இன்போசிஸ் ஆகியவற்றின் விலை அதிகளவு குறைந்ததே. பார்தி ஏர்டெல், மாருதி, விப்ரோ ஆகியவற்றின் விலைகள் குறைந்தன. நுகர்வோர் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பங்கு விலையும் குறைந்தது. சென்செக்ஸ பிரிவில் உள்ள 30 பங்குகளில் 19 நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.

மிட் கேப் 98.42, சுமால் கேப் 168.37, பி.எஸ்.இ-500 43.78 புள்ளிகள் அதிகரித்தன. தேசிய பங்குச் சந்தையில் தகவல் தொழில் நுட்பம் தவிர மற்ற பிரிவு பங்குகளின் குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

வெப்துனியாவைப் படிக்கவும்