70 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாததை 10 ஆண்டுகளில் செய்த மோடி..! ராஜ்நாத் சிங் புகழாரம்..!!

Senthil Velan

திங்கள், 8 ஏப்ரல் 2024 (16:02 IST)
70 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு நாட்டிற்கு செய்ய முடியாததை, கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி செய்து கொடுத்துள்ளதாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
 
நாமக்கல் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கே.பி. இராமலிங்கத்தை ஆதரித்து பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங்,   தமிழ் மொழி பழைமையான மொழி மட்டுமல்ல, கலாச்சாரத்தில் உயர்வான மொழி ஆகும் என்றார்.  2014-க்கு முன் பொருளாதாரத்தில் இந்தியா 11-ஆவது இடத்தில் இருந்தது என்றும் 2024-ல் ஐந்தாம் இடத்தில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 
வரும் 2027-ல் மூன்றாம் இடத்துக்கு முன்னேறுவது உறுதி என குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், 2024 தேர்தலில்  400 இடங்களை கைப்பற்றி மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 70 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு நாட்டிற்கு செய்ய முடியாததை, கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி செய்து கொடுத்துள்ளார் என்று ராஜ்நாத் சிங் புகழாரம் சூட்டினார்.
 
21-ஆம் நூற்றாண்டில் உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை உற்று நோக்கி கொண்டிருக்கின்றன என்றும் பொருளாதாரத்தில் மிகப்பெரிய சக்தியாக இந்தியா வளர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ALSO READ: தேர்தலில் பிரதமருக்கு வேட்டு வைக்க வேண்டும்..! உதயநிதி ஸ்டாலின்..!!
 
திமுகவும், காங்கிரசும் தங்களுடைய குடும்பத்திற்காக அரசியல் செய்து கொண்டிருக்கிறது என்றும் ஆனால் பிரதமர் மோடி நாட்டிற்காக பாடுபட்டு வருகிறார் என்றும் குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், அவருடைய கரத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த தேர்தலில் பாஜக வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்