ஐ.பி.எல்: 3-வது இடம் யாருக்கு? பெங்களூர்- டெக்கான் இன்று மோதல்
சனி, 24 ஏப்ரல் 2010 (13:38 IST)
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு சென்னை - மும்பை அணிகள் தகுதிபெற்றுள்ள நிலையில் 3வது இடம் யாருக்கு என்பதில் பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் - ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் இடையே இன்று போட்டி நடைபெறுகிறது. மும்பையில் இரவு 8 மணிக்கு இப்போட்டி நடைபெறுகிறது.
மும்பைக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற ராயல் சாலஞ்சர்ஸ் அணி, 3வது இடத்தையாவது பிடிக்கவேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.
அதேசமயம் சென்னைக்கு எதிராக 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற டெக்கான் சாலஞ்சர்ஸ், 2வது முறையாக பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தாலும் முதல் மூன்று இடங்களுக்குள் வரவேண்டும் என்ற ஆதங்கத்தில் உள்ளது.
எனவே இரு அணிகளும் போட்டியை வெல்ல வேண்டும் என்ற ஆவலில் தீவிரம் காட்டி வருகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வரும் அணிகள், இந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெறும்.
சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் கட்டாயம் எங்கள் அணி தகுதிபெறும் என்று டெக்கான் அணியின் தலைவர் கில்கிறிஸ்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ராயல் சாலஞ்சர்ஸ் அணியில் தொடக்க நிலை வீரர்கள் காலிஸ், திராவிட், மணீஷ் பாண்டே ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதேபோல் கோலி, உத்தப்பா, பீட்டர்சன் ஆகியோர் அடுத்த நிலையில் இருப்பதால் வெற்றிவாய்ப்பு எங்களுக்கே அதிகமாக உள்ளது என்றும் கும்ளே தெரிவித்தார்.
இவ்விரு அணிகளுக்கு இடையே இதுவரை இரண்டு போட்டிகள் நடைபெற்றுள்ளன. முதல் போட்டியில் டெக்கான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இரண்டாவது போட்டியிலும் டெக்கான் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
எனவே முந்தைய போட்டிகளில் பெற்ற வெற்றி மட்டுமல்லாமல் யார் முதலில் பேட்டிங் என்பதும் வெற்றியைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.