இறுதிப்போட்டிக்கு செல்வது யார்? தோனி, ஸ்ரேயாஸ் ஐயர் இன்று பலப்பரிட்சை!

வெள்ளி, 10 மே 2019 (08:55 IST)
கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தற்போது கிளைமாக்ஸ் கட்டத்திற்கு வந்துள்ளது. ஃபைனல் உள்பட இன்னும் இரண்டு போட்டிகளே உள்ள நிலையில் இன்று விசாகப்பட்டினம் மைதானத்தில் இரண்டாவது பிளே ஆஃப் போட்டி நடைபெறவுள்ளது. இதில் சிஎஸ்கே அணியும் டெல்லி அணியும் மோதவுள்ளது
 
சிஎஸ்கே அணியை பொருத்தவரையில் இந்த தொடரில் ஏற்கனவே இரண்டு முறை டெல்லி அணியை வீழ்த்தியுள்ளதால் இந்த போட்டியிலும் வென்றுவிடலாம் என்ற நம்பிக்கை உள்ளது. இருப்பினும் சிஎஸ்கே அணியின் பேட்டிங் கவலை தரும் வகையில் உள்ளது. தோனி தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் சில சமயங்களில் மட்டுமே நன்றாக விளையாடி பல சமயங்களில் சொதப்பி வருகின்றனர். குறிப்பாக வாட்சன் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே 96 ரன்கள் அடித்துள்ளார். தோனி மட்டுமே அணியை வெற்றிப்பாதைக்கு இழுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. சிலசமயம் அதுவும் முடியாமல் போகிறது
 
அதேபோல் சிஎஸ்கே அணியுடன் இருமுறை தோல்வி அடைந்திருந்தாலும் எலிமினேட்டர் சுற்றில் ஐதராபாத் அணியை வீழ்த்தியுள்ளதால் ஸ்ரேயாஸ் தலைமையிலான டெல்லி அணியும் இன்றைய போட்டியில் நம்பிக்கையுடன் உள்ளது. அந்த அணியின் ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், இங்க்ராம், தவான், ரபடா, ஆகியோர்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர்., 
 
இதுவரை சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகள் ஐபிஎல் போட்டிகளில் 19 முறை மோதியுள்ளது. இதில் 13ல் சிஎஸ்கே அணியும் 6ல் டெல்லி அணியும் வெற்றி பெற்றுள்ளது. பழைய ரிக்கார்டுகள் சிஎஸ்கே அணிக்கு சாதகமாக இருந்தாலும் டி20 போட்டியை பொருத்தவரையில் அன்றைய நாளில் யாருக்கு அதிர்ஷ்டம் இருக்கின்றதோ, அவர்தான் வெற்றி பெற முடியும். இன்று அதிர்ஷ்ட தேவதை தோனியின் பக்கமா? ஸ்ரேயாஸ் ஐயர் பக்கமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்