குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு

Webdunia

வெள்ளி, 23 செப்டம்பர் 2011 (17:13 IST)
குற்றாலம் முதன்மை அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றாலத்தில் சீசன் துவங்கியதில் இருந்தே நீர் பெருக்கு நன்றாக இருந்ததாக வந்த சேதியைக் கேட்டு போக வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தது மனது.

அருவிகளில் குளிக்க வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் வெகுவாக அதிகரித்துக் கொண்டிருக்க, அருவியில் வரும் நீரில் குளித்தவர்களின் மகிழ்ச்சியும் அதிகரித்தது.

நாமும் சென்று அருவியில் குளிக்கலாம் என்று ஒருவழியாக கிளம்பி வந்தாச்சு. முதன்மை அருவி, ஐந்தருவி என மனம் குரங்காக குதித்துக் கொண்டிருந்தது.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் நேற்று காலையில் இருந்தே (நாம் குற்றாலத்தில் கால் வைத்த நேரம்) குற்றாலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. குற்றாலத்தில் மழை என்றால் கேட்கவா வேண்டும்.

இதனால் குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுவிட்டது. முதன்மை அருவியில் கட்டப்பட்டிருக்கும் பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டிக் கொண்டிருக்கிறது.

குற்றாலம் வந்தாச்சு.... அருவியில் தண்ணீர் கொட்டினாலும் பரவாயில்லை என்று அருவியில் குளிக்கச் சென்ற நம்மை சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி காவல்துறையினர் வெளியேற்றி விட்டனர், நமக்குப் பின்னர் வந்த சுற்றுலாப் பயணிகளும் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

சரி முதன்மை அருவியில் தான் குளிக்கத் தடை... ஐந்தருவிக்குச் செல்லலாம் என்று அங்கே சென்றாலும் இதேக் கதைதான்.

ஐந்தருவியிலும் தண்ணீர் கொட்டோ கொட்டு என்று கொட்டிக் கொண்டிருக்க... அருவியில் குளிக்க ஆசையாக ஓடோடி வந்த நமக்கு ஏமாற்றமே மிச்சம். என்றாலும் மனம் தளரவில்லை.

அருவியில் தண்ணீர்பெருக்கு குறைந்ததும் குளிக்க அனுமதிக்கப்படுவர் என்று காவல்துறை உறுதி கூறியுள்ளதுதான் சற்று ஆறுதல்.

வெப்துனியாவைப் படிக்கவும்