இப்பூவுலகில் வாழும் மக்களின் நன்மை கருதி ஆங்காங்கே ஆலயங்களில் ஹோமங்களும், சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன.
தொடர்ந்து 35 நாட்கள் பல ஹோமங்கள் அடங்கிய நக்ஷத்திர ஸத்ர இஷ்டி மஹாயாகம், சென்னை பெசன்ட் நகர் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் அண்மையில் நடைபெறவுள்ளது.
வரும் வைகாசி மாதம் 12-ம் தேதி வெள்ளிக்கிழமை (மே 26) அமாவாசையன்று துவங்கி ஆனி மாதம் 15-ம் நாள் (ஜூன் 29) முடிய தொடர்ச்சியாக இந்த யாகம் நடக்கிறது.
இதன் முன்னோடியாக வைகாசி 11-ம் நாள் (மே 25-ம் தேதி) வியாழக்கிழமை காலை 8 மணியளவில் இந்த யாகத்தைப் பற்றிய அறிவிப்பு நடக்கிறது. அன்று மாலை இந்த யாகத்தை நடத்தவுள்ள வேதவிற்பன்னர்கள் வேதம் ஓத, பக்தர்கள் நாம சங்கீதத்துடன் பெசன்ட் நகர் பிரதான வீதிகளில், ஸ்ரீ வரசித்தி விநாயகர், வெள்ளித் தேரில் பவனி வருவார்.
சென்ற சில ஆண்டுகளில் சில கொடிய இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டு உலகை மிகவும் பாதித்தன. நில நடுக்கங்கள், சுனாமி தொடர்ந்து வறட்சி நிலை, பிறகு எதிர்பாராத அளவிற்குப் பெருமழை, வெள்ளம் எனத் தோன்றி மக்களைத் திக்குமுக்காடவைத்தன அல்லவா?
எதிர்காலத்தில் இவை போன்ற சீற்றங்களிலிருந்து நம்மைப் பாதுகாக்க இறையருளை வேண்டி இந்த யாகம் செய்யப்படுகிறது.
இந்த யாகங்களை முறைப்படி செய்ய முற்றிலும் கற்றுத் தேர்ந்து அதன் படி வாழ்ந்து வரும் அறிஞர்கள் கலந்து கொண்டு, சிறப்பாகச் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நம்பிக்கையும், பக்தியும் கொண்டு மனம், மொழி, மெய் ஒன்றுபட்டு இன, மொழி வேறுபாடில்லாமல் உலக நன்மைக்காக இந்த யாகம் நடத்தப்படுவதால், இதில் பங்குகொள்ளும் தனி மனிதர்களும் இறையருளைப் பெற்று தம் விருப்பங்களை வேண்டுதல் செய்துக் கொள்ளலாம்.
இந்த யாக, ஹோமங்கள் செய்யும்போது உண்டாகும் புகை மாமருந்தாக மாறிச் சுற்றுப்புறத்தைத் தூய்மைப் படுத்துவதாக இருப்பதோடு கிருமிகளை அழிக்கவும் வல்லது என்று நம்பப்படுகிறது.
யாகம் நடக்கும் பலமணி நேரமும், அன்பர்கள் ஒன்றிய மனத்துடனும், பக்தி உணர்வுடனும் இருப்பதால் தீமைகள் அகலவும், நன்மைகள் பெருகிடவும் வழிவகுக்கும். இந்த நாட்களில் அன்னதானம் உள்ளிட்ட பல வகை தானங்கள் நடக்கவுள்ளதால் பல ஏழை எளிய மக்கள் பயன்பெறுவார்கள்.
இவ்வகை யாகங்களால் பலன் என்ன என்று பார்க்கும்போது, அஸ்வினி முதல் ரேவதி வரை உள்ள நக்ஷத்திரங்களுக்கான அதி தேவதைகளும், கால தேவதைகளும் வணங்கப்படுவதால் அந்தந்த நக்ஷத்திரங்களில் பிறந்தவர்கள் அந்தந்த நக்ஷத்திரம் சம்பந்தப்பட்ட யாகத்தில் பங்கேற்பதால் அவரவர் ஜாதகப் படி அமைந்துள்ள ஏழரை நாட்டுச்சனி, அர்த்தாஷ்டமசனி, ஜன்மகுரு, அஷ்டமகுரு, ராகு, கேது, செவ்வாய் முதலிய கிரகங்களால் ஏற்படும் மனக்கவலை, குழப்பம், எதிரிகள் பயம், நோய்கள், வறுமை, கடன் தொல்லை, திருமணம் தடைப்படுவது, குழந்தையின்மை முதலிய எல்லா விதமான இடையூறுகளும் கண்டிப்பாக விலகும்.
நாள்தோறும் கணபதிஹோமம், ஆண்டுதோறும் வேதபாராயணம், நான்கு மஹா கும்பாபிஷேகம் என்று இடைவிடாமல் ஆராதனைகள் நடந்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ வரசித்தி வல்லப மஹா கணபதி ஆலயத்தில் இந்த மஹா யாகம் நடைபெறுவது மேலும் சிறப்பானதாகும்.
இந்த நாட்களில் (மே 26 முதல் ஜூண் 29 வரை) நடைபெறும் ஹோமங்கள், சிறப்புச் சொற்பொழிவுகள், வேத பாராயணங்கள் தவிர குறிப்பிட்ட நாட்களில் இன்னிசைக் கச்சேரிகளும் நடைபெறும்.
27 நக்ஷத்திரங்களும் அவற்றின் பிரதான மற்றும் அதிதேவதைகளும்
வரிசை எண் ....நக்ஷத்திரம் ........பிரதான தேவதை ........அதிதேவதை