செல்வம் உண்டாக வெள்ளெருக்கு விநாயகர் வழிபாடு

எருக்கஞ்செடி குடும்பத்தைச் சேர்ந்தது வெள்ளெருக்கு. நீல எருக்கு, ராம எருக்கு என ஒன்பது வகையான எருக்குகள் இருக்கின்றன என சித்தவைத்தியர்கள் கூறுகின்றனர்.


 
 
எருக்கஞ்செடி 12 ஆண்டுகள் மழையில்லாமல் இருந்தாலும் கூட, சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை கிரகித்து வளரும் தன்மை கொண்டது. அதன் பருவகாலத்தில் பூத்து, காய்த்து, வளர்ந்துவிடும். இதில் விஷேச அம்சம் கொண்டதுதான் வெள்ளெருக்கு. இதை வீட்டிலும் வளர்க்கலாம்.
 
இதன் பூவை வைத்து விநாயகருக்கும், சிவனுக்கும் அர்ச்சனை செய்யலாம். வெள்ளெருக்கம் பூ சங்கை பஸ்மமாக்கப் பயன்படுகிறது. வெள்ளெருக்கு பட்டையை நூலுக்குப் பதில் விளக்குத்திரியாக போட்டு வீட்டில் எரிக்க சகல பூதங்களும் விலகி ஓடும். வெள்ளெருக்கு வடவேரில் மணிமாலை செய்யலாம். விநாயகர் செய்து வழிபடலாம். ஆகர்ஷணம் எட்டு வகைப்படும். இதில் தன ஆகர்ஷணம் பண வரவை அள்ளிக் கொடுக்கக் கூடியது இந்த வெள்ளெருக்கு விநாயகர்.
 
வெள்ளெருக்கு விநாயகர் என பல இடங்களில் விற்பனை செய்கிறார்கள். வேர்ப்பகுதிக்கு பதில் தண்டுப்பகுதியில் விநாயகர் செய்து விற்கிறார்கள். அதனால்,அது விரைவில் உளுத்துப்போய் உதிர்ந்துவிடுகிறது. தரமான விநாயகர் பிள்ளையார் பட்டியிலும், சூரியனார் கோவிலிலும் கிடைப்பதாகக் கூறுகின்றனர்.
 
அங்கு போக முடியாதவர்கள், உங்களுக்கு நம்பிக்கைக்குரிய சித்த வைத்தியர் மூலமாக வெள்ளெருக்கு செடியை அடையாளம் கண்டு, அதன் வேரை எடுத்து உள்ளூர் ஆசாரியை வைத்து வெள்ளெருக்கு விநாயகர் செய்து கொள்ளவும். ஒரு வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணிக்குள் ராகு காலத்தில்,அதற்கு அரைத்த மஞ்சள் கலவையைத் தடவவும். அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12க்குள் ராகு காலத்தில் சந்தனம் அரைத்த கலவையை அதன்மேல் தடவி, நிழலில் காய வைக்கவும்.
 
இப்பொழுது அதன் கதிர்வீச்சுக்கள் கட்டுப்படுத்தப்பட்டு, நன்மையான கதிர்கள் நம் வீட்டில் பரவும்படி தயார் செய்து விட்டோம். இனி, அவரவர் இஷ்டம் போல வழிபாடு செய்யலாம்; தூப தீப நைவேத்தியம் செய்யலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்