திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்: தெய்வத்தின் மீது பாடப்பட்ட பாமாலை

Mahendran

செவ்வாய், 1 ஜூலை 2025 (18:07 IST)
சிவபெருமானின் அடியார்களால் போற்றி பாடப்பட்ட பன்னிரு திருமுறைகளில், முதல் ஏழு திருமுறைகள் 'தேவாரம்' என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில், திருஞானசம்பந்தர் முதல் மூன்று திருமுறைகளையும், திருநாவுக்கரசர் நான்கு முதல் ஆறு வரையிலான திருமுறைகளையும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஏழாம் திருமுறையையும் அருளியுள்ளனர். 'தெய்வத்தின் மீது பாடப்பட்ட பாமாலை' என்பதால், இப்பாடல்கள் 'தேவாரம்' எனப் பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.
 
தேவாரத்தில் உள்ள ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் நாம் இப்போது பார்க்கலாம்.
 
பாடல்:
 
நெய்தவழ் மூவெரி காவல்ஓம்பு நேர்புரி நூல்மறை யாளர்ஏத்த
மைதவழ் மாடம் மலிந்தவீதி மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செய்தவ நான்மறை யோர்கள்ஏத்தும் சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்
கைதவழ் கூர்எரி ஏந்திஆடும்கணபதி ஈச்சரம் காமுறவே.
 
- திருஞானசம்பந்தர் அருளியது
 
விளக்கம்:
 
நெய் ஊற்றி வளர்க்கப்படும் மூன்று வகையான வேள்வித் தீயைப் பாதுகாத்து, வேதங்களை முறைப்படி ஓதும் அந்தணர்கள் போற்றும் திருத்தலம் திருமருகல். அங்கு, மேகங்கள் தவழும் உயர்ந்த மாடங்கள் நிறைந்த வீதிகளில் வீற்றிருக்கும் இறைவனே!
 
வேள்வி செய்வதையே தவமாகப் போற்றி வாழும் நான்மறையாளர்கள் (நான்கு வேதங்களை நன்கு அறிந்தவர்கள்) புகழ்ந்து போற்றும் சிறப்புமிக்க செங்காட்டங்குடி திருத்தலத்தில், உமது திருக்கரத்தில் பெரிய நெருப்பை ஏந்தி நடனம் புரிவதற்கு ஏற்ற இடமாக கணபதி ஈச்சரம் என்னும் கோயிலை நீர் விரும்பித் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் என்ன? அக்காரணத்தை எனக்குச் சொல்ல வேண்டும், இறைவா!
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்