முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு, வரும் ஜூலை 7 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெறுகிறது. இக்கோவில் வளாகத்தில் ரூ.300 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட பிரம்மாண்டப் பணிகள், கும்பாபிஷேக விழாவுக்கான ஆயத்தப் பணிகளை மேலும் சிறப்புறச் செய்துள்ளன.
கும்பாபிஷேக விழா கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. மொத்தம் 12 கால யாக பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த பூஜையில், தான்ய வழிபாடு, முதன்மைத் திருக்குட வழிபாடு, பரிகார வேள்வி, திருக்குட வழிபாடு, மூலவர் திருக்குட அபிஷேகம், நண்பகல் வழிபாடு ஆகியவை நடைபெற்றன. மாலையில் ஐந்தாம் கால யாக பூஜை நடைபெறுகிறது, அதில் தான்ய வழிபாடும், வேள்விச் சாலை தூய்மைப்படுத்துதலும் இடம்பெறுகின்றன.
வருகிற ஜூலை 7 ஆம் தேதி, அதிகாலை 4 மணிக்கு 12 ஆம் கால வேள்வி வழிபாடு, வேள்வி, மகா தீபாராதனை, யாத்ரா தானம் ஆகியவை நடைபெற உள்ளன. காலை 5:30 மணிக்கு கடங்கள் மூலாலயப் பிரவேசம் செய்யப்படும். பின்னர், காலை 6:15 மணிக்கு விமான கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.