விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள திருவண்ணாமலை குன்றின் மீது அமைந்துள்ளது, பழமையான சீனிவாச பெருமாள் திருக்கோயில்.
ஆண்டாள் - ரெங்கமன்னார் திருக்கல்யாணத்தை காண திருப்பதி வெங்கடாசலபதி தனது பரிவாரங்களுடன் வந்துகொண்டிருந்தபோது, நாரதர் மூலம் திருமணம் முடிந்துவிட்டதை அறிகிறார். இதனால், திருப்பதிக்கு திரும்ப முடிவெடுக்கிறார்.
அப்போது, ஆண்டாள் அவரைத் தடுத்து, இங்கேயே தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டுகிறார். ஆண்டாளின் வேண்டுகோளை ஏற்று, வெங்கடாசலபதி இந்த மலை உச்சியில் கோயில் கொண்டுள்ளார்.
இந்த கோயிலின் மூலவர் ஒன்பதடி உயர திருமேனியுடன், திருப்பதியில் உள்ளது போலவே நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். பெருமாள் சன்னிதியை அடைய 150-க்கும் மேற்பட்ட படிகளை ஏற வேண்டும். இங்கு கருடாழ்வார், நரசிம்மர், கிருஷ்ணர் உள்ளிட்ட பல சன்னிதிகள் அமைந்துள்ளன.
இழந்த செல்வத்தை மீட்டுத் தரும் சக்தி இந்த சீனிவாச பெருமாளுக்கு இருப்பதாகப் பக்தர்கள் உறுதியாக நம்புகின்றனர். இத்தகைய சிக்கலில் இருப்பவர்கள் இங்கு வந்து வேண்டினால், அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறுகின்றனவாம். திருப்பதியில் செய்வதுபோலவே இங்கும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக முடி காணிக்கை செலுத்துகின்றனர். மேலும், கோ தானம் செய்வது இங்கு சிறப்பானது.
இந்த சீனிவாசப் பெருமாள், சாதி, மதம் பேதமின்றி அனைவருக்கும் குல தெய்வமாக விளங்குகிறார். கோயில் நடை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். இங்கு மூன்று கால பூஜைகள் நடைபெறுகின்றன.