விலங்குகளாக மாறிய வாலி, இந்திரன், எமன்.. பாவ விமோச்சனம் பெற்ற கோயில் தான் இது..!

Mahendran

வெள்ளி, 6 ஜூன் 2025 (18:30 IST)
திருவண்ணாமலை மாவட்டத்தில் பாலாற்றின் தெற்கரையில் அமைந்துள்ள சிறிய  தொன்மை மிக்க கிராமம் தான் குரங்கணில் முட்டம். இந்த ஊரின் பெயர், மூன்று விலங்குகளின் தியாகமும் தவமும் அடிப்படையாகக் கொண்டு உருவானது என்பது விசேஷம்.
 
வாலி, இந்திரன், எமன் ஆகிய மூவர், தங்கள் பாவப் பயனால் முறையே குரங்கு, அணில், காகம் ஆக பிறந்து மன வேதனையில் தவித்தனர். பழைய உருவங்களை மீட்க, பரமசிவனை வேண்டினர். இறைவன், காஞ்சிபுரம் அருகேயுள்ள தலத்தில் வழிபாடு செய்தால் முக்தி கிடைக்கும் என அருளினார்.
 
அதன்படி அந்த மூவரும் இத்தலத்தில் இறைவனைத் தரிசித்து, தங்கள் பாவம் கழிந்து மறுவாழ்வைப் பெற்றதாக தல வரலாறு கூறுகிறது. இதனாலே, இத்தலம் "குரங்கணில் முட்டம்" என்று பெயர் பெற்றது. இங்கு தல மூலவராக இருக்கும் இறைவன், வாலீஸ்வரர் என்றும், மலைமீது சுயம்புவாக வெளிப்பட்டதால் கொய்யாமலைநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.
 
இங்கு விநாயகர் வலம்புரி தோரணையிலும், முருகர் அற்புத உருவத்திலும் பிரதிஷ்டிக்கப்பட்டுள்ளனர். இறைவனது கருவறைக்கு வலப்புறமாக இறையார் வளையம்மை என்ற திருநாமத்தில் அன்னை உறைவாளாக காட்சி தருகிறாள்.
 
திருஞானசம்பந்தர் இவ்வாலயத்தில் வழிபட்டு பதிகம் பாடியுள்ளார். இலந்தை மரம் தலவிருட்சமாகவும், காகம் தன் அலகால் தீண்டிய ‘காக்கை மடு’ தீர்த்தமாகவும் முக்கியத்துவம் பெற்றவை.
 
இத்தலம், தொண்டை நாட்டில் புகழ்பெற்ற ஆறாவது சிவஸ்தலமாக விளங்குகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்