சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!

Mahendran

திங்கள், 23 ஜூன் 2025 (18:15 IST)
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற நடராஜர் கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் ஆனி திருமஞ்சனப் பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
 
விழாவின் ஒரு பகுதியாக, நாளை  வெள்ளி சந்திரப்பிறை வாகனத்திலும், ஜூன் 25 அன்று தங்க சூரியப்பிறை வாகனத்திலும் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. 
 
இதை தொடர்ந்து, ஜூன் 27 அன்று வெள்ளி ரிஷப வாகனத்திலும், ஜூன் 28 அன்று வெள்ளி யானை வாகனத்திலும், ஜூன் 29 அன்று தங்க கைலாச வாகனத்திலும் சுவாமி வீதி உலா நடைபெறும். ஜூன் 30 அன்று தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலா நடைபெற உள்ளது.
 
விழாவின் மிக முக்கிய நிகழ்வாக, ஜூலை 1 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அன்றிரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனையும் நடைபெறும். 
 
ஜூலை 2 ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடைபெறும். காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை நடைபெறும். 
 
அன்றைய தினம் மதியம் 3 மணிக்கு மேல் ஆனி திருமஞ்சன தரிசனம் மற்றும் ஞானகாச சித்சபா பிரவேசம் நடைபெறும். இறுதியாக, ஜூலை 4 ஆம் தேதி தெப்ப உற்சவத்துடன் விழா இனிதே நிறைவடையும்.
 
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பொது தீட்சிதர்கள் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்