புதன் கிழமையில் வரும் பிரதோஷ வழிபாட்டு பலன்கள் !!

புதன், 24 ஆகஸ்ட் 2022 (12:54 IST)
புதன்கிழமையில் பிரதோஷம் அமைந்திருப்பது நற்பலன்களைத் தந்தருளக்கூடியது. இந்த நன்னாளில், சிவ வழிபாடு செய்யுங்கள். பிரதோஷ பூஜையில் கலந்துகொள்ளுங்கள்.


புதன் கிழமையில் வரும் பிரதோஷ விரதம் இருப்பவர்கள், செவ்வாய்கிழமை மாலையிலேயே நன்றாக குளித்து சிவ ஆலயத்திற்கு சென்றோ அல்லது வீட்டிலிருந்தோ சிவனை வழிபட்டு "ஓம் நமசிவாய" என்ற மந்திரத்தை கிழக்கு திசை நோக்கி அமர்ந்து 108 முறை உச்சரிக்க வேண்டும். பின்னர் இரவு எளிய உணவு எடுத்து உறங்கிவிடுங்கள்.

புதன்கிழமை காலையில் எழுந்து குளித்து, அருகில் உள்ள சிவ ஆலயத்திற்கு செருப்பு போடாமல் நடந்து சென்று சிவ பெருமானையும், நந்தி பகவானையும் வழிபட்டு, நான் புதன் கிழமை பிரதோஷ விரதம் இருக்கின்றேன், என் வாழ்க்கையில் இருக்கும் அத்தனை செல்வ தடைகளும் காணாமல் போக வேண்டும் என வேண்டி கோயிலில் அமர்ந்து 108 முறை ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை கொடிமரத்திற்கு அருகில் அல்லது, தல விருச்சத்திற்கு அருகில் அல்லது நந்தி பகவானுக்கு அருகில் அமர்ந்து உச்சரிக்கவும்.

பிரதோஷ வேளையில் சிவனாருக்கும் நந்திதேவருக்கும் நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துகொண்டு கண் குளிரத் தரிசியுங்கள். நந்தி பகவானுக்கு அருகம்புல் மாலை அணிவித்தால் தொழில் தடைகள் நீங்கும்.

சிவ வழிபாடு செய்து, சிவனுக்கு அர்ச்சனை செய்யுங்கள். சிவ ஸ்தோத்திரம் பாராயணம் செய்யுங்கள். ருத்ரம் ஒலிக்கவிட்டு கேளுங்கள். கஷ்டங்களையெல்லாம் போக்கி அருளுவார் தென்னாடுடைய சிவனார். துக்கங்களை யெல்லாம் நீக்கி அருளுவார் ஈசன். பிரதோஷ பூஜையில் கலந்துகொள்ளுங்கள். புதன் கிழமையன்று வரும் பிரதோஷத்தில் சிவ தரிசனம் செய்தால், புத்தியில் தெளிவு உண்டாகும். மனோபலம் பெருகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்