அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோவிலில், இந்த ஆண்டுக்கான ஆடித்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆடித்திருவிழா தொடங்கிய நிலையில், விழா நாட்களில், அன்னம், சிம்மம், அனுமன், கருடன், மற்றும் யானை போன்ற பல்வேறு வாகனங்களில் அழகர் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். மறவர் மண்டபத்தில் அழகர் எழுந்தருளும் நிகழ்வும் சிறப்பு பெற்றது.
திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான திருத்தேரோட்டத்தில், தேவியர்களுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அழகர், தேரில் பவனி வந்தார். இன்று இரவு புஷ்பப் பல்லக்கு மற்றும் சந்தனம் சாத்துபடி நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இந்த விழாவுக்காக, 1000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், முக்கிய இடங்கள் 40 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.