ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் என்றால் என்ன? வழிபடும் முறை என்ன?

புதன், 2 ஆகஸ்ட் 2023 (15:21 IST)
ஒவ்வொரு வருடமும் ஆடிப்பெருக்கு ஆடி மாதம் 18ஆம் தேதி கொண்டாடப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆடி மாதம் மழையால் ஏற்படும் தண்ணீர் பெருக்கை வரவேற்று கொண்டாடப்படும் விழாவை ஆடிப்பெருக்கு என்று கூறப்படுகிறது.
 
குறிப்பாக கிராம பகுதிகளில் நல்ல மழை பெய்து ஆறுகளில் புது வெள்ளம் பெருகிவரும் நாளில் ஆற்றை வணங்கி புனித நீராடுவார்கள். குறிப்பாக காவிரி நதியில் இந்த கொண்டாட்டம் மிகவும் சிறப்பாக நடைபெறும். 
 
ஆடி பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கு ஏற்ப ஆடி மாதத்தில் 18ஆம் தேதி பலர் விவசாயத்தை தொடங்குவார்கள். இந்த நாளில் ஆறுகளுக்கு சென்று ஆடிப்பெருக்கு பலர் கொண்டாடுவார்கள். ஆறுகளுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே வித விதமான பலகாரம் சமைத்து வீட்டு வாசலை அலங்கரித்து  காவிரி வைகை தாமிரபரணியை மனதால் வணங்கி கொண்டாடுவார்கள். 
 
ஆடிப்பெருக்கு நாளில் கன்னிப்பெண்கள் வழிபட்டால் சிறந்த கணவர்கள் என்றும் புதுமண பெண்கள் ஆடிப்பெருக்கென்று  வழிபட்டால் சுமங்கலியாக இருப்பார்கள் என்றும்  நம்பிக்கையாக உள்ளது. 
 
ஆடிப்பெருக்கு நாளை அதாவது ஆகஸ்ட் 3ஆம் தேதி  தமிழக முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. நாளைய தேதியில் துவிதியை திதியும், பிற்பகல் வரை அவிட்டம் நட்சத்திரமும் பிறகு சதயம் நட்சத்திரமும் வருகிறது. நாளை வியாழக்கிழமை என்பதால் அன்று காலை 10.45 முதல் 11.45 வரை மட்டுமே நல்ல நேரம் உள்ளது. மாலையில் நல்ல நேரம் கிடையாது. காலை 6 முதல் 07.30 வரை எமகண்டமும், பகல் 01.30 முதல் 3 வரை ராகு காலமும் உள்ளது. இதனால் காலை 07.35 மணிக்கு மேல் வழிபாட்டினை துவங்கி, பகல் 01.15 மணிக்கு முன்னதாக முடித்து விடுவது நல்லது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்