வட்டிக்குறைப்பு இல்லை; ரிசர்வ் வங்கி கைவிரிப்பு!

திங்கள், 18 ஜூன் 2012 (12:23 IST)
பணவீக்க விகிதம் அதிகரித்துள்ளதால் வங்கிகளின் கடன் மீதான வட்டி விகிதத்தை மத்திய ரிசர்வ் வங்கி குறைக்கும் என்று சந்தையில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் மத்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் எந்த வித மாற்றத்தையும் செய்யவில்லை.

மேலும் மத்திய ரிசர்வ் வங்கியில் நாட்டில் இயங்கும் வங்கிகள் வைத்திருக்கவேண்டிய டெபாசிட் தொகையான ரொக்கக் கையிருப்பு விகிதத்தையும் மாற்றாமல் 4.75% என்றே தக்கவைத்துள்ளது ரிசர்வ் வங்கி.

எதிர்கால கொள்கை முடிவுகள் சந்தை நிலவரம், பணவீக்கம், உள்நாட்டு வளர்ச்சி போன்ற புறக்காரணிகளால் தீர்மானிக்கப்படும் என்று ஆர்.பி.ஐ. அறிவித்துள்ளது.

வட்டி விகிதம் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பினால் ரிசர்வ் இன்று 153 புள்ளிகள் உயர்வுடன் துவங்கிய பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கும் மேல் சரிவு கண்டு மீண்டும் 17,000 புள்ளிகளுக்கும் கீழ் சரிவு கண்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் குறுகிய கால கடன் வட்டி விகிதம் 8% ஆக தக்கவைக்கப்பட்டுள்ளது.

இதனால் சந்தை சக்திகள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளன. ஆனால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்துவதுதான் சிறந்த வழி ரிசர்வ் வங்கி அதனைச் செய்யவில்லை என்று நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்