வங்கி முறைப்படுத்துச் சட்டத்தில் மாற்றம் தேவை: சுப்பா ராவ்

வெள்ளி, 3 டிசம்பர் 2010 (17:27 IST)
நமது நாட்டின் வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் வங்கி அமைப்பை வழுவாமல் பாதுகாத்து வருகிறது என்றாலும், காலத்தின் தேவைக்குத் தக்கவாறு அதில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று இந்திய மைய வங்கியின் (ஆர்பிஐ) ஆளுநர் சுப்பா ராவ் கூறியுள்ளார்.

மும்பையில் இன்று துவங்கிய பான்கான் 2010 என்றழைக்கப்படும் வங்கிகள் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றிய சுப்பா ராவ், “இந்தியாவின் வங்கிகள் ஒழுங்குமுறை சட்டம் காலத்தைக கடந்த நின்ற ஒன்று. அது சிக்கல்களை தடுப்பதிலும், நிதி நிலையை சீராக வைத்திருப்பதிலும் மைய வங்கிக்கு மிகவும் உதவியது. என்றாலும், சமீபத்தில் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதாரச் சிக்கல் நமது ஒழுங்குமுறைகளை நாம் மாற்றியமைக்க வேண்டிய அவசியத்தை நமக்கு கற்பித்துள்ளது” என்று கூறியுள்ளார்.

வங்கிகளை முறைப்படுத்தும் எண்ணற்ற சட்டங்கள் சில நேரங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. இவை ஒன்றிற்கு ஒன்று முரண்பட்டு நிற்கின்றன. இவை அனைத்திற்கும் பதிலாக ஒரே ஒரு சட்டத்தை உருவாக்கினால் வங்கி ஒழுங்கமைப்பில் தெளிவைக் கொண்டுவர முடியும் என்று கூறினார்.

“நிதித் துறை சீர்திருத்தத்தை கொண்டு வர அமைக்கப்பட்டுள்ள நிதி ஆணையம், கொள்கையால் தான் வழி நடத்தப்பட வேண்டுமே தவிர, அதற்கு நேர் எதிரான வழியில் அல்ல” என்றும் சுப்பா ராவ் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்