கலவரத்தினால் காஷ்மீரில் வணிக இழப்பு ரூ.21,000 கோடி!

புதன், 1 செப்டம்பர் 2010 (14:06 IST)
காஷ்மீர் பள்ளத்தாக்கில் மத்திய, மாநில காவல் படைகளுக்கு எதிராக காஷ்மீர் மக்கள் கலவரத்தில் ஈடுபட்டதன் காரணமாக நடத்தப்பட்ட வேலை நிறுத்தம், அரசு பிறப்பித்த ஊரடங்கு ஆகியவற்றால் கடந்த 80 நாட்களில் ரூ.21,000 கோடி அளவிற்கு வணிக இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஜூன் 11ஆம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய கூடுதல் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு சிறுவன் கொல்லப்பட்டான். கண்ணீர் புகைக் குண்டில் காயம்பட்டே அந்த சிறுவன் இறந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கிலுள்ள 10 மாவட்டங்களிலும் காவல் படையினர் மீது இளைஞர்களும், மாணவர்களும், பிறகு பெண்களும் கல்லெறிந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்கள் மீது காவல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இதுவரை 62 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் முழுவதும் ஏற்பட்ட இப்பதற்றத்தினால் தொழிற்சாலைகள், சுற்றலா பயணிகள் தங்கும் விடுதிகள் ஆகியன மூடப்பட்டன. இவைகளில் பணியாற்றிவந்தவர்கள் பணி இழந்தனர். நிலைமையில் இன்னமும் முன்னேற்றம் ஏற்படவில்லை.

“எங்கெல்லாம் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது என்ற துல்லியமான தரவுகள் எங்களிடம் இல்லை. ஆனால், உணவு, தங்கும் விடுதிகளில்தான் அதிகமான வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு அடுத்தப்படியாக சுற்றுலா பயண வாகனங்களை நடத்தும் நிறுவனங்களில் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது” என்று காஷ்மீர் தொழில், வணிக அமைப்பின் தலைவர் நசீர் அகமது தார் கூறியுள்ளார்.

பொதுவாக குளிர் காலத்தில் சுற்றுலா பயணிகள் வருகை குறையும்போது பணி வாய்ப்பும் குறையும், ஆனால் இம்முறை கலவரச் சூழல் காரணமாக மிக முன்னதாகவே வேலை இழப்பு துவங்கிவிட்டது என்று தார் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்