அபுதாபியில் உள்ள மருத்துவமனையில் வேலை பார்க்க 40 வயதுக்கு உட்பட்ட பி.எஸ்சி, டிப்ளமோ நர்சிங், லேப் டெக்னீஷியன்கள் தேவை என்று அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் தற்போது அபுதாபியில் உள்ள மருத்துவமனைக்கு ஆட்கள் தேர்வு செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.
கிளினிக்கில் அனுபவம் பெற்ற 40 வயதுக்கு உட்பட்ட பி.எஸ்சி, டிப்ளமோ நர்சிங், லேப் டெக்னீஷியன்கள் தேவை. தகுதி மற்றும் அனுபவத்துக்கு ஏற்ப ரூ.45 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படும்.
அபுதாபி மருத்துவ அமைச்சகத்தால் தேர்வு நடத்தப்படும். இதற்கான தேர்வை பெங்களூரில் நர்சுகளும், லேப் டெக்னீசியன்கள் அபுதாபியிலும் சென்று எழுத வேண்டும்.
தகுதி வாய்ந்தவர்கள் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் இதர சான்றுகளின் நகலை சென்னை அடையாறு, எண்.48, டாக்டர் முத்துலட்சுமி சாலையில் உள்ள வீட்டுவசதி வாரிய வணிக வளாகத்தில் அமைந்துள்ள அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் வரும் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.