பாஜகவின் பிரதமர் கனவு பலிக்காது - வீரப்ப மொய்லி

திங்கள், 20 ஜனவரி 2014 (15:05 IST)
FILE
பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் கனவு பலிக்காது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி மங்களூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, மத்திய அரசு ஒரு வீட்டிற்கு மானிய விலையில் 9 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வழங்குவதாக அறிவித்திருந்தது. தற்போது ஆண்டுக்கு 12 கியாஸ் சிலிண்டர்கள் ஒரு குடும்பத்தினருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு அடுத்த வாரம் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் கிடைக்கும்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். பா.ஜனதா கட்சியின் பிரதமர் கனவு பலிக்காது. மத்தியபிரதேசம் உள்பட 3 மாநிலங்களில் மட்டுமே பா.ஜனதா கட்சி வெற்றி பெற வாய்ப்புள்ளது. கர்நாடகத்தை பொறுத்தவரை பா.ஜனதாவின் கனவு ஒரு முடிந்து போன அத்தியாயம்.

எடியூரப்பா பா.ஜனதாவுக்கு வந்ததால், அந்த கட்சி புத்துணர்வு பெற்றுள்ளதாக கருதுகிறார்கள். ஆனால் கர்நாடகத்தில் பா.ஜனதாவின் நிலைமை மேலும் மோசம் அடைந்துள்ளது. அது தான் உண்மை. தென் இந்தியாவில் எந்த காலத்திலும் பா.ஜனதா கட்சி வளர்ச்சி அடைய முடியாது என்று அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்