நாளை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை பட்டமளிப்பு விழா

செவ்வாய், 3 நவம்பர் 2009 (15:43 IST)
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நவம்பர் 4-ம் தேதி சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. பல்கலைக்கழகத்தில் எம்.பில். படிப்பு தடை செய்வதற்கு முன் வரை தேர்ச்சி பெற்ற 1,199 பேர் உள்பட முதுநிலை மற்றும் இளநிலை பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகளில் மொத்தம் 15,650 பேர் பட்டம் பெறுகின்றனர்.

பல்கலைக்கழகத் துணைவேந்தராக கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் பொறுப்பேற்ற கல்யாணி அன்புச்செல்வன் முதல் முறையாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நவம்பர் 4-ம் தேதி சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டமளிப்பு விழாவில் ‘மாணவர் விவரத் தொகுப்பு திட்டத்த’ துவக்கி வைக்கிறார்.

இத்திட்டத்தின் கீழ், மாணவரின் முகவரி, அவர் படிக்க வேண்டிய பாடங்கள், செலுத்த வேண்டிய கல்விக் கட்டண விவரங்கள், கடிதத் தொடர்பு விவரங்கள், தேர்வு முடிவுகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பல்கலைக்கழகத்தின் tnou.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.

இதுதவிர, முகவரி மாற்றத்திற்கு விண்ணப்பித்தல், நகல் அடையாள அட்டை பெற விண்ணப்பித்தல், தேர்விற்கு விண்ணப்பித்தல் போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம். இத்தகைய திட்டம் தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களில் தொடங்கப்படுவது இதுவே முதல் முறை.

திறந்தநிலைக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையிலும், அவர்களைத் தேர்விற்குத் தயார் செய்யும் வகையிலும், பல்வேறு கல்வி மையங்களில் படிக்கும் மாணவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, அவர்களுக்கு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்களைக் கொண்டு பாடங்களைத் தொகுத்து வழங்கவும் பரிசீலிக்கப்படுகிறது. தவிர, உள்கட்டமைப்பு வசதிகள் சரியில்லாத தனியார் கல்வி மையங்களை மூடும் நடவடிக்கை தொடரும்' என்று கல்யாணி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்