மெட்ரிக்குலேஷன் தேர்வு புதன‌‌ன்று ஆரம்பம்

செவ்வாய், 17 மார்ச் 2009 (11:04 IST)
மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் புதன்கிழமை தொடங்குகின்றன.

அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 10-ம் வகுப்பு மெட்ரிக்குலேஷன் மற்றும் ஆங்கிலோ-இந்தியன் தேர்வுகள் புதன்கிழமை தொடங்கி ஏப்ரல் 8-ந் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3 ஆயிரத்து 128 பள்ளிகளில் இருந்து ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 787 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.

ஆங்கிலோ-இந்தியன் தேர்வை 4 ஆயிரத்து 697 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். ஓ.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை ஆயிரத்து 361 ஆகும். தேர்வு மையங்களில் மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. மாணவர்கள் கலந்து அமர்ந்து தேர்வு எழுதுவார்கள். மொத்தம் 2 ஆயிரத்து 788 மையங்களில் தேர்வு நடக்கிறது.

பிளஸ்-2 தேர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதைப் போல 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கும் மாவட்ட கல்வி அதிகாரிகளால் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்குவிக்கவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளி தேர்வு மையத்தை ரத்து செய்யவும், அங்கீகாரத்தை ரத்து செய்யவும் பரிந்துரை செய்து கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்