திறந்தநிலைப் பல்கலையில் பட்டம் பெற்றவரா நீங்கள்?

திங்கள், 24 ஆகஸ்ட் 2009 (13:00 IST)
தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பால், 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்காமல் திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களின் மூலம் பட்டம் பெற்றவர்கள் இனி அரசு பணியில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலாளர் வெங்கட் ராமன் கடந்த 18ஆம் தேதி பிறப்பித்த அரசாணையில், பள்ளி இறுதித் தேர்வு மற்றும் பள்ளி மேல்நிலைக் கல்வித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களில் பெறப்படும் பட்டயம், பட்டம், முதுநிலை பட்டம் மட்டுமே பொதுப் பணி நியமனம், பதவி உயர்வு பெறுதல் ஆகியவற்றுக்கு அங்கீகரிக்கப்படும் என ஆணையிடப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதாமல், நேரடியாக திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் இனி தமிழக அரசு பணிகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், தற்போது 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதாமல், நேரடியாக திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று அரசு பணியில் உள்ளவர்களும் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்