குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற 4,342 பேருக்கு நேர்காணல் அழைப்பு

புதன், 29 ஜூலை 2009 (16:15 IST)
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) குரூப்-2 எழுத்துத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் தேர்ச்சி பெற்ற 4 ஆயிரத்து 342 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. தலைமைச் செயலக உதவிப்பிரிவு அலுவலர், டி.என்.பி.எஸ்.சி. உதவிப் பிரிவு அலுவலர், சார்பதிவாளர் நிலை-2, கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர் என மொத்தம் 2 ஆயிரத்து 73 காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு நடந்தது. சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுதினர்.

இதற்கான தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் 4 ஆயிரத்து 342 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கான நேர்காணல் ஆகஸ்ட் 18ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறும். தேர்ச்சி பெற்றவர்களின் விவரம், டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்