ஊரக திறனாய்வுத் தேர்வு: வருமான உச்சவரம்பு அதிகரிப்பு

திங்கள், 3 ஆகஸ்ட் 2009 (17:57 IST)
ஊரகத் திறனாய்வுத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.12 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும் என்ற அளவுகோல் தற்போது ரூ.ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளதால், அதிகளவிலான மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிராமப்புற மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் ஊரக திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது. 8ஆம் வகுப்பில் 50% மதிப்பெண்களுக்கு மேல் பெற்று, 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இத்தேர்வு எழுதத் தகுதியானவர்கள்.

இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 11ஆம் வகுப்பு வரை ஆண்டுக்கு ரூ.ஆயிரம் வீதம், 3 ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். ஆனால் தேர்வு எழுதும் மாணவரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும் என்ற விதி காரணமாக இத்தேர்வை குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே எழுதினர்.

இந்நிலையில், தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், ரூ.ஒரு லட்சம் வரை (ஆண்டுக்கு) குடும்ப வருமானம் உள்ள மாணவர்கள் பங்கேற்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்