தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ்காரர்களில் சிலர் தி.மு.க. மீது பழி தூற்றுவது, தி.மு.க.வுடன் கூட்டணியே கூடாது என்று ‘அதிகப் பிரசங்கம்’ செய்வதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தொலைத்தொடர்புத் துறையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு சம்பந்தமாக, தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மீது எதிர்க்கட்சிகளால் சுமத்தப்பட்ட குற்றச்சாற்றுகள் ஒவ்வொன்றும் ஆதாரமற்றவை. நாள்தோறும் வெளியாகும் பல உண்மைகள்மூலம் இது அம்பலமாகி வருகிறது.
மேற்கு வங்கத்தில் பேசிய, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இரண்டு முக்கிய கருத்துகளைக் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் எங்களைக் கலந்தாலோசிக்காமலேயே அவரே முன்வந்து, பொதுக்கணக்குக் குழு முன் தான் ஆஜராகத் தயார் என்று கூறிவிட்டார். அது தேவையற்றது. பிரதமர் என்பவர் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே பதில் கூறக் கடமைப்பட்டவர். ஜே.பி.சி. என்ற நாடாளுமன்றக் கூட்டுக் குழு பற்றி நாடாளுமன்ற சட்ட விதிகளில் எதுவுமே இல்லை. எனவே, அந்தக் கோரிக்கை அர்த்தமற்றது என்று பிரணாப் கூறியிருக்கிறார்.
அதேபோல், ராசா தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கவில்லை; எந்தத் தவறையும் செய்யவில்லை. அவர் முந்தைய பா.ஜ.க. வகுத்த முடிவினைத்தான் செயல்படுத்தியுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.
சி.ஏ.ஜி தணிக்கை அறிக்கை என்பது திட்டமிட்டே ராசா மீது பழி போடவே தயாரிக்கப்பட்டதோ என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. இல்லையானால், நாளேடுகளில் வருவது மாதிரி பெட்டிச் செய்தி அயிட்டங்களாக அவர் பிரித்துப் போட்டிருப்பாரா? வேறு எந்த ஒரு தணிக்கை அதிகாரியும் இப்படிச் செய்ததாக வரலாறே இல்லை. மேலும் உண்மைகள் விரைவில் வெளியாகும்.
தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ்காரர்களில் சிலர் தி.மு.க. மீது பழி தூற்றுவது, ‘தி.மு.க.வுடன் கூட்டணியே கூடாது’ என்று ‘அதிகப் பிரசங்கம்’ செய்வதை நிறுத்திக் கொள்ளவேண்டும். இதனால் காங்கிரஸ் கட்சிக்கும், தலைமைக்கும்தான் கெட்ட பெயரை உருவாக்குகிறார்கள் என்பது பொது நிலைப் பார்வையாளர்கள் கருத்தாகும் என்று வீரமணி கூறியுள்ளார்.