கோட்டா'-வில் சேர்ந்த ஏழை மாணவர்களை அவமானப்படுத்தும் பெங்களூர் பள்ளி!

புதன், 18 ஜூலை 2012 (16:50 IST)
புதிய தீண்டாமை!
ஆர்.டி.இ. கோட்டாவில் சேரும் ஏழை மாணவச்சிறுவர் சிறுமிகளை முடியை கோரமாக வெட்டி அவமானப்படுத்தும் தனியார் பள்ளிகள்!
அனைவருக்கும் கல்வியுரிமை அவசியம் என்ற அடிப்படையில் மத்திய அரசு கல்வியுரிமைச் சட்டத்தை இயற்ற உயர் மத்தியதர வர்க்க, மற்றும் பணக்காரப் பிள்ளைகளைச் சேர்த்து கொள்ளை அடித்து வந்த பல பள்ளிகளுக்கு இது ஒரு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி போராட்டத்தில் குதித்தன.

இந்தச் சட்டத்தின் படி 25% கல்வியுரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை மாணவர்களுக்கும் இடமளித்தாகவேண்டும். இது பல கல்வி நிறுவனங்களுக்கு கடும் ஆத்திரத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் உச்சகட்ட விளைவுதான் இந்த சம்பவம்.

இது பற்றி பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

பெங்களூர் நகரத்தில் உள்ள கர்நாடகா அரசு உதவிபெறாத பள்ளிகள் நிர்வாகக் கூட்டமைப்பின் கீழ் வரும் பள்ளியில் சிலவற்றில் இந்த "கோட்டா'வில் சேர்ந்த மாண்வ மாணவிகளை சமூகத்தின் படிமுறையில் மேல்தளத்தில் உள்ள மாணவ மாணவிகளிடமிருந்து பிரித்துக் காண்பிக்க இவர்களது தலைமுடியை தாறுமாறாக வெட்டி அசிங்கப்படுத்தியுள்ளது பள்ளி நிர்வாகம்.

மத்திய அரசின் இந்த கோட்டாவை எதிர்த்து கடுமையாக போராடி வரும் பள்ளிகளில் இதுவும் ஒன்று.

கோட்டா மாணவ, மாணவிகளுக்கு 'டை', பெல்ட் கொடுக்கப்படுவதில்லை. அவர்கள் கடைசி பெஞ்சில் அமரவைக்கப்படுகின்றனர். அவர்கள் வகுப்பிற்குள் நுழையும் போது அவர்களது டிபன் பாக்ஸை சோதனை செய்து உள்ளே அனுப்புவது என்று காந்தி பிறந்த நாட்டில் தீண்டாமை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது!

மேல்ஜாதி அமைப்புகளால் நடத்தப்படும் இத்தகைய பள்ளிகளில் மாண்வர்கள் அசைவ உணவு கொண்டு வந்து விடக்கூடாது! பிற உயர்நிலை மாணவர்கள் இவர்களுடன் சேரக்கூடாது என்பதற்காக இவர்களை தனியே அடையாளப்படுத்தி அசிங்கப்படுத்தும் கொடுமைகளைச் செய்து வருகிறது தனியார் பள்ளிகள்!

நந்தினி லே அவுட்டில் உள்ள இந்தப் பள்ளியில் முதலாம் வகுப்பில் கோட்டாவில் சேர்ந்த மாண்வர்களை பள்ளிக் கூட்டங்கள், பிரேயர்கள் முதலியவற்றிற்கு சேர்க்காமல் தனியாக நிற்கவைக்கப்படுவதாக கடும் புகார்கள் எழுந்துள்ளன.

இதனால் குழந்தைகள் மன உளைச்சலுக்கு ஆளாவதாக பெற்றோர்கள் கடும் கோபமடைந்துள்ளனர்.

ஆர்.டி.இ. சட்டத்தின் படி அதாவது அனைவருக்கும் கல்வியுரிமைச் சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படும் மாணவ, மாணவிகளை பாகுபாடு செய்யக்கூடாது.

இந்தத் தீண்டாமைக் கொடுமையைச் செய்த பள்ளி நிர்வாகத்தின் மீது எடுக்கப்படும் நடவடிக்கை உயர்நிலை வகுப்பு மாணவர்களை மட்டுமே சேர்க்கும் பள்ளிகளுக்கு ஒரு பாடமாக இருக்கவேண்டும் என்பதே தற்போது பெங்களூரில் உள்ள சமூக நல ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்