கடந்த தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 'உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டு திட்டம்' மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதே போல் 108 இலவச ஆம்புலன்ஸ் சேவையும் நல்மதிப்பை பெற்றது. நல்லவேளையாக அது கலைஞர் அவசர சேவை என்று வைக்காமல் விட்டதால் அந்த திட்டம் தப்பியது.
கடந்த ஆட்சியில் 2 லட்சத்து 62 ஆயிரம் ஏழைகள் உயர் சிகிச்சையை இலவசமாகப் பெற்றுள்ள காப்பீட்டுத்திட்டத்தை தற்போது ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க அரசு நிறுத்தி விட்டது.
இந்த திட்டத்தை நிறுத்தியதற்காக காரணத்தை தமிழக அரசு விளக்கியுள்ளது. ''தற்போதுள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மக்களின் தேவைகளை நிறைவு செய்யத்தக்க வகையில் முழுமையாக இல்லை என்பதால், இத்திட்டம் கைவிடப்படும். அனைவருக்கும் தரமான மருத்துவச் சேவை வழங்கும் நோக்கத்தை எட்டக்கூடிய வகையில் ஒரு புதிய பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை இந்த அரசு அறிமுகப்படுத்தி அனைவரும் மருத்துவ வசதி பெறுவதை உறுதி செய்யும்'' என்பதுதான் அந்த விளக்கம்.
இந்த மருத்துவ திட்டத்திற்காக பல லட்சம் குடும்பங்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. தற்போது அந்த அட்டைகள் அனைத்தும் குப்பைக்கு போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு பதிலாக அனைவருக்கும் தரமான மருத்துவச் சேவை வழங்கும் வகையில் ஒரு புதிய பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தப்போவதாக கூறியுள்ள தமிழக அரசு, ஏற்கனவே இருந்த திட்டத்தை நீக்குவதற்குக் கூறிய காரணம் ஏற்றுக்கொள்வதாக இல்லை.
கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வந்த ஊரக வீட்டு வசதித் திட்டம் பல குறைபாடுகளுடன் இருந்தது உண்மைதான். கட்டுமானச் செலவு இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகரித்துவிட்ட நிலையில் வீடு கட்ட வழங்கப்படும் நிதி ரூ.75 ஆயிரமாக இருந்தது. இதனால் ஏழை எளிய குடும்பங்கள் கடன் சுமையில் சிக்கினர்.
இதன் காரணமாக மிக அதிக எண்ணிக்கையில் வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை. தற்போதைய அரசும் இதே காரணத்தை சொல்லி இத்திட்டத்தினை கைவிட்டுள்ளது.
FILE
இதற்கு மாற்றாக, கிராமப்புற ஏழைகள் பயன்பெறும் வகையில் ‘சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்’ தொடங்கப்படும் என்றுதமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தில் சுமார் 300 சதுர அடி அளவில் ரூபாய் 1.80 இலட்சம் செலவில் அரசே வீடு கட்டிக் கொடுக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
அதே போல், நகர்ப்புர ஏழைகளின் வீட்டுவசதிக்காக மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களின் நிதியை ஒருங்கிணைத்து ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் சென்னை நகரில் ஆற்றோரங்களில் வாழும் குடும்பங்களுக்கு பாதுகாப்பான நவீன வீடுகள் வழங்கப்படும் என்றும் தற்போதைய அ.இ.அ.தி.மு.க அரசு தெரிவித்துள்ளது.
சமச்சீர் கல்வியை நிறுத்தாமல் அதன் பாடத்திட்டங்களை மறு ஆய்வு செய்ய வல்லுநர் குழு அமைத்துள்ளது தமிழக அரசு. இந்த வல்லுநர் குழு ஆய்வு செய்து பரிந்துரைகளை அளித்த பின்னர் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளது அரசு.
சமச்சீர் கல்வி பாடத்திட்டங்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் வல்லுநர் குழு ஆய்வு நடத்தி முடிக்க வேண்டும். அப்படி முடித்தால்தான் மட்டுமே அடுத்த ஆண்டிலாவது சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த முடியும். ஆய்வு என்பதே திட்டத்தை நிறுத்தத்தான் என்பதை மக்கள் புரிந்து கொள்ளும் அளவுக்கு தமிழக அரசு நடந்து கொள்ள கூடாது என்பது நமது விருப்பமாக உள்ளது.