உலகக் கோப்பையை வென்றது என் வாழ்நாளில் மறக்க முடியாதது - சச்சின் டெண்டுல்கர்

வியாழன், 6 நவம்பர் 2014 (18:49 IST)
உலகக் கோப்பையை வென்றது தனது வாழ்நாளில் மறக்க முடியாதது என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
 
டெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்க்கை பற்றி 'பிளேயிங் இட் மை வே' என்ற பெயரில் சுயசரிதை எழுதியுள்ளார். அவரது சுயசரிதை மும்பையில் நேற்று வெளியிடப்பட்டது. இந்த நூலை அவரது ஆரம்பகால பயிற்சியாளர் ரமாகாந்த் அசரேக்கர் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் அவரது மனைவி, மகன் மற்றும் ஏராளனமானோர் கலந்து கொண்டனர்.
 
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சச்சின், "2011–ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாகும். இறுதிப்போட்டியில் நான் ஆட்டம் இழந்து வெளியேறிய பிறகு ஆட்டத்தைப் பார்க்கவில்லை. மைதானத்தில் உள்ளே இருந்த நான் வெற்றிக்காக பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தேன். வெற்றியை குறித்து எனக்குத் தெரியவந்ததும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தேன். என் வாழ்க்கையில் இது பெருமை அளிக்கக் கூடியதாகும்" என்று கூறினார்.
 
மேலும் அவர் கூறுகையில், 'எனது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை மக்கள் தெரிந்து கொள்வதற்காகவே இந்த சுயசரிதையை எழுதியுள்ளேன்' என்றும் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்