ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் பலியான விவகாரத்தில் விராட் கோலியை கைது செய்ய வேண்டும் என ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி வெற்றி பெற்ற நிலையில், அதற்கான வெற்றி கொண்டாட்டம் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் கடந்த 4ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொள்ள திரண்டதால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் பரிதாபமாக பலியானார்கள். அவர்களுக்கு கர்நாடக அரசு, ஆர்சிபி நிர்வாகம் இழப்பீடு அறிவித்துள்ளன.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கர்நாடகா போலீஸார் ஆர்சிபி நிர்வாகி உள்பட 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் ஆர்சிபி அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராட் கோலியை கைது செய்ய வேண்டுமென குரல்கள் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்கள் முன்னதாக அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 பட ரிலீஸின்போது ஏற்பட கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் பலியான விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டு அல்லு ரசிகர்கள், அல்லு அர்ஜுனுக்கு ஒரு சட்டம்.. விராட் கோலிக்கு ஒரு சட்டமா? 11 பேர் பலியான விவகாரத்தில், விராட் கோலியை கைது செய்ய வேண்டும் என குறிப்பிட்டு #ArrestKohli என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அல்லு ரசிகர்கள் மட்டுமல்லாமல் வேறு சிலரும் அதே ஹேஷ்டேகில் பதிவிட்டு வரும் நிலையில், விராட் கோலிக்கு ஆதரவாகவும் பலர் பதிவிட்டு வருகின்றனர்.
Edit by Prasanth.K