பாயை போட்டு படுத்து விட்ட ஸ்மித்.. முதல் இன்னிங்ஸே அபாரம்! தாக்குப்பிடிக்குமா இந்தியா?

வியாழன், 8 ஜூன் 2023 (07:06 IST)
ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதல் இன்னிங்ஸிலேயே ஆஸ்திரேலியா அணி அபாரமாக விளையாடியுள்ளது.



உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இந்தியா – ஆஸ்திரேலியா இடையே லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. பந்து வீசத் தொடங்கி 3.4வது பந்திலேயே ஓப்பனிங் பேட்ஸ்மேன் கவாஜா விக்கெட்டை சிராஜ் தூக்கியது இந்திய அணிக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தது.

ஆனால் வழக்கம்போல நின்று நிதானமாக ஆடிய டேவிட் வார்னர் 43 ரன்கள் அடித்து அரைசதத்தை நெருங்கி கொண்டிருந்தபோது ஷர்துல் தாக்குர் பவுலிங்கில் கேட்ச் கொடுத்து விக்கெட் ஆனார். அடுத்த இரண்டு ஓவர்களுக்கு பிறகு 24வது ஓவரில் லம்பஷாக்னேவும் அவுட் ஆக ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாக மாறுவதாக தெரிந்தது.



ஆனால் அதற்கு பிறகு களம் இறங்கிய ஸ்டீவ் ஸ்மித்தும், ட்ராவிஸ் ஹெட்டும் மைதானத்தில் பசை போட்டு ஒட்டியதுபோல நகராமல் நின்று விட்டார்கள். வேகப்பந்து வீச்சாளர்களின் யாக்கர்கள் எதுவும் வேலை செய்யவில்லை. 156 பந்துகளில் ட்ராவிஸ் ஹெட் 146 ரன்களை விளாசினார். ஸ்டீவ் ஸ்மித் பாயை போட்டே படுத்து விட்டார். 227 பந்துகளுக்கு 95 ரன்களை அடித்திருந்தார் ஸ்மித்.

ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரே 327 ஆக உள்ளது. 3 விக்கெட்டுகளுக்கு பின்னர் பெரிய விக்கெட்டுகளும் இல்லை. இது இந்தியாவிற்கு சிக்கலாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்