பிசிசிஐ தலைவராக சீனிவாசன் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி மறுப்பு

வியாழன், 17 ஏப்ரல் 2014 (12:06 IST)
சூதாட்டப்புகார்களை கண்டுகொள்ளாது விட்டது உட்பட 12 புகார்கள் சீனிவாசன் மேல் உள்ளது என்றும், நீதிபதி முத்கல் கொடுத்த விசாரணை அறிக்கையில் இடம்பெற்ற 13பேரில் சீனிவாசன் பெயரும் உள்ளது என்றும் இதனால் இவரை தலைவர் பதவியைத் தொடர அனுமதிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஏ.கே.பட்னாயக் தலைமையிலான, நீதிபதிகள் குழு பிறப்பித்த உத்தரவு: 
 
சூதாட்டம் தொடர்பாக, நீதிபதி முத்கல் குழு அளித்த அறிக்கையில், 12 வீரர்கள் பெயர்களுடன், 13வது நபராக சீனிவாசனும் உள்ளார். இவர் மீது, 12 புகார்கள் கூறப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றுக்கும் ஆதாரங்கள் இணைக்கப்பட்டு உள்ளன. இதன் அடிப்படையில் பார்க்கும் போது, சூதாட்ட புகார்கள் தன் கவனத்துக்கு வந்த பிறகும், சீனிவாசன் அவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று தெரிகிறது. 
 
முத்கல் குழு அறிக்கையில் சீனிவாசன் பெயர் உள்ளதால், விசாரணை முடியும் வரை, பி.சி.சி.ஐ., தலைவர் பதவியில் தொடர அனுமதிக்க முடியாது. இதுகுறித்து, சிறப்பு விசாரணை குழு, சி.பி.ஐ., அல்லது போலீஸ் மூலம் விசாரிக்க விரும்பவில்லை. 
 
ஏனெனில், இது கிரிக்கெட் வீரர்களின் நன்மதிப்பு மற்றும் பி.சி.சி.ஐ.,யின் தன்னாட்சி அமைப்புக்கு பாதிப்பாக அமையும். பி.சி.சி.ஐ., தனிப்பட்ட முறையில் விசாரிக்க வேண்டும். தோனி, சீனிவாசன் உள்ளிட்டோர் அளித்த வாக்குமூலம் பெறுவது தொடர்பான, பி.சி.சி.ஐ., மனு விசாரணைக்கு ஏற்கப்படுகிறது. இந்த வழக்கு, 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு, தீர்ப்பில் கூறப்பட்டது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்