'ஷரபோவா என்னை தெரியாது எனச் சொன்னது அவமரியாதை இல்லை' - சச்சின் டெண்டுல்கர்

புதன், 23 ஜூலை 2014 (16:02 IST)
தன்னை யாரென தெரியாது எனக் கூறிய டென்னிஸ் வீராங்கனை ஷரபோவாவின் கருத்தை அவமரியாதையாக கருதக்கூடாது என சச்சின்   டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் உலகில் ஒரு சகாப்தமாக விளங்கிய சச்சின் டெண்டுல்கர், அண்மையில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியைப் பார்க்க 'ராயல் பாக்ஸ்' -ல் பிரபல கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் உட்பட சில பிரபலங்களுடன் அமர்ந்திருந்தார்.
 
அப்போது, மைதானத்தில் விளையாடிய ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவிடம், டெண்டுல்கர் பற்றி கேட்கப்பட்டபோது, சச்சின் பற்றி தெரியாது என அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
ஷரபோவாவின் இந்த பதிலால் அதிர்ச்சியும், கோபமும் அடைந்த சச்சின் ரசிகர்கள் ஷரபோவாவின் பேஸ்புக் பக்கம் மற்றும் சமூக வளைதலங்களில் ஷரபோவாவிற்கு எதிராக பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர். 
 
இந்நிலையில் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் சச்சின் டெண்டுல்கர், தன்னை யாரென தெரியாது எனக் கூறிய டென்னிஸ் வீராங்கனை ஷரபோவாவின் கருத்தை அவமரியாதையாக கருதக்கூடாது எனவும், அவர் கிரிக்கெட் பார்க்காதவராக இருப்பார் அதனால் அவருக்கு என்னைத் தெரிந்திருக்காது எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்