பஞ்சாப்பை பஞ்சராக்கியது புனே: 2-வது இடத்துக்கு முன்னேற்றம்!

ஞாயிறு, 14 மே 2017 (19:05 IST)
ஐபிஎல் தொடரில் பஞ்சாப், புனே அணிகளுக்கு இடையேயான கடைசி லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் புனே அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்து இரண்டாவது இடத்துக்கு முன்னேறி தனது பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது.


 
 
இரு அணிகளும் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தான் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற நெருக்கடியுடன் களம் இறங்கியது. புனேவி நடைபெற்ற இந்த போட்டி மாலை 4 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற புனே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
 
இதனையடுத்து முதலில் களம் இறங்கிய பஞ்சாப் அணி, புனே அணியின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 73 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. அந்த அணியில் அக்சர் பட்டேல் மட்டும் அதிகபட்சமாக 22 ரன் எடுத்தார். மற்ற அனைவரும் சொற்ப ரன்னில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
 
புனே அணியில் தகுர் 3 விக்கெட்டுகளையும், உனாட் கட், சம்பா, கிறிஸ்டியன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். புனே பந்துவீச்சாளர்கள் 15.5 ஓவர்களிலேயே பஞ்சாப் அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
 
இதனையடுத்து 74 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய புனே அணி 12 ஓவரில் வெற்றி இலக்கை 1 விக்கெட்டை மட்டும் இழந்து அடைந்தது. இதன் மூலம் 48 பந்துகள் மீதமிருக்கு புனே அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.
 
புனே அணியில் அதிகபட்சமாக ரகானே 34 ரன்கள், த்ரிபாதி 28 ரன்கள் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் புனே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியதுடன் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. பஞ்சாப் அணி தனது பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது.
 
20 புள்ளிகளுடன் முதல் இடத்தில் மும்பை அணியும், 18 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் புனே அணியும், 17 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் ஐதராபாத் அணியும் 16 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் கொல்கத்தா அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்