நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில், கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக இருந்த ட்ரேவோர் பேலிஸ், ஜூன் மாதம் இங்கிலாந்தின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து அந்த பதவி காலியாக இருந்தது.
இதனால், அடுத்த பயிற்சியாளரை நியமிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது. இதையடுத்து காலிஸ் கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக ஒப்பந்தமாகியுள்ளார். இவர் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டி முதல் பயிற்சியாளராக பொறுப்பேற்பார்.
இது குறித்து ஜாக் காலிஸ் கூறுகையில், ‘‘இந்தியாவில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எனது குடும்பம். எனக்கு அந்த அணியுடன் 2011ஆம் ஆண்டு முதல் மகிழ்ச்சியான அனுபவங்கள் நிறைய உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி குடும்பத்தில் ஒரு அங்கமாக இருப்பது பெருமையாக உணர்கிறேன். புதிய சவாலை ஆவலோடு எதிர்நோக்கி உள்ளேன்’’ என்று காலிஸ் குறிப்பிட்டார்.
ஜாக் காலிஸ் 2008ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்காக, 98 போட்டிகளில் விளையாடி 2427 ரன்கள் [17 அரைச்சதங்கள்] குவித்துள்ளார். மேலும், 65 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணி 2012ஆம் ஆண்டு கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.